Monday, November 20, 2017

தாபம்

கால பைரவன் எப்படித்தான்
கண் தூங்காது
புளிய மரத்தின் உச்சிக் கொம்பில்
தவம் இருக்கின்றானோ!!!
ஓராயிரம் யுகங்கள்
தொடுதல் அற்று காத்திருக்கும்
ஒரு
கள்ளிச் செடியாக
மனம் இன்றிரவு..
பல யுகங்களாக
நித்திரை கொள்ளாத
கண்களின் சுமை
மனதில் ஏறுகின்றது
அவளை அனுப்பிவிட்டு
வீடு செல்கின்றேன்
கட்டிலும், தொட்டிலும்
சோபாவும்,
சட்டியும் முட்டியும்,
முட்டை பொரித்த பின்
எஞ்சிப் போன தாச்சியும்
சிந்தப்பட்ட ஒரு சொட்டு
எண்ணெயும்,
கழட்டிப் போட்ட
பனிச்சப்பாத்தும்
எல்லாமும் அப்படியே
இருக்க
எதுவும் அற்ற சூனியம்
அப்பிக் கொள்கின்றது
எல்லாம் இருந்தும்
எதுவும் அற்ற பெரு வெளியில்
மனம் அலைகிறது
“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு எனக்கு அகாது என்னைக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”

No comments: