Friday, July 26, 2013

இப்படியும் வாழ்க்கை உண்டு


உறக்கம் கலைக்க யாரும் இல்லை என்றாலும்
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்....
எப்படியும் ஏற்பட்டுவிடும்
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள் .....

வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமன்றி
வாசல் தாண்டி போவான்  தபால்காரன் ......

எடுத்து பரிமாற யாருமன்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும் ......

அலுவல் நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்து பேசினாலும்..
அத்தனையும் பொய் என்றே
உள்மனம் உரைக்கும்...

சூரியன் மெல்லமாய் மறையத் தொடங்கும் ....
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும் ...

இருள் பரவிய அடர்ந்த இரவில்
நிலவில் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும் .....

நினைத்து பார்க்க நினைவுகளில்லை
உறங்கி போனால் கனவுகளுமில்லை
எனும்போது!!!!

ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல
அடிமனதில் ஒரு விசும்பல் தொடங்கும்....