Tuesday, December 16, 2014

சபரிமலை

பல ஆண்டுகளாய் போய் வர எண்ணியிருந்த ஸ்தலம். தென் இந்தியாவின் ஏக கோயில்களுக்கும் சென்று வந்துள்ளேன், சபரிமலை இன்னும் போகவில்லை என்பது குறையாகவே இருந்து வந்தது.  எப்பொழுதும் போல அன்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கையில் சபரிமலை பற்றிய பேச்சு வர எல்லோருக்கும் ஒரு வித ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

அஷோக் மனைவி கேரளா என்பதால், அவர் மேற்படி எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட 41 நாள் விரதம் இருந்து செப்டம்பர் மாதம் 16 தியதி கண்ணி சாமி பூஜைக்கு சபரிமலையில் இருப்பது என முடிவானது.
ஆக் 2 சனிக்கிழமை அன்று முழுவதும் வீட்டை சுத்தம் செய்யும் வேலை, இரவு நானும் அஷோக்கும் பூஜைக்கு தேவையான கருப்பு நீல வேட்டி, சட்டை, துண்டு, மாலை, ஐயப்பன் படம் என எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட, ஆக் 3, ஞாயிறு காலை 6 மணிக்கு பெங்களூர், மடிவாலாவில் இருக்கும் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில்  நான், அஷோக் அவர் மனைவி மூவரும் சென்று வேண்டிக்கொண்டு முதல் முறையாய் நானும் அஷோக்கும் கண்ணி சாமி அவதாரம்.




முதல் இரண்டொரு நாட்கள் சிரமமாய் இருந்தாலும் பின்னர் பழகிவிட, சைவ உணவு, ஹரிவராசனம் போன்ற ஐயப்பன் பாடல்களுடன் மிக ஷ்ரத்தையுடன் விரதம் தொடர்ந்தது. அலுவலகம் சென்று வரும்பொழுது வெறும் மாலை மட்டும் அணிந்து  கொண்டேன், இரவு வீடு வந்ததும் வேட்டி சட்டை, ஊருக்கு சென்றால் வேட்டி சட்டை என முடிந்த வரை அமைதியாய் நாட்கள் நகர்ந்தன. அம்மா இரண்டு வாரம் என்னுடன் வந்து இருக்க கொஞ்சம் சாப்பாட்டு சிரமம் இன்றி இருந்திருந்தேன்.

செப்டம்பர் 16 கண்ணி பூஜை நடை திறக்கப்படும் என சபரிமலை வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். மூன்று நாட்கள் விரதம் இருந்து நாங்களும் வருகிறோம என் ராஜேஷும் கணேஷும் எங்களுடன் சேர்ந்துகொள்ள மொத்தமாய் நாங்கள் நால்வர்  செப்டம்பர் 16 சபரிமலையில் இருப்பது என முடிவானது. பெங்களூரிலிருந்து சபரிமலை போக வர சுமார் 1600கிமீ.  மிக நெடிய பயணமாய் இருக்கும் என்பதால், பெங்களூரிலிருந்து கொச்சினுக்கு விமானத்தில் சென்றுவிட்டு அங்கிருந்து ஒரு வண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு போய் வருவது எனவும், விமானத்தில் செல்வதால் இருமுடி பம்பை சென்று கட்டிக்கொண்டு அங்கிருந்து மலை ஏறலாம் எனவும் உடன்பாடு.

ராஜேஷும் கணேஷும் மாலை போட்டுக்கொள்ள, நான் அசோக் என நால்வரும் சபரிமலை செல்ல அயத்தமாணோம். அஷோக்கின் காரில் பெங்களுரு விமான நிலையம் சென்று அங்கேயே வண்டிய நிறுத்திவிட்டு, ஏர் ஆசியா விமானத்தில் ஒரு மணிநேர கொச்சின் பயணம். கொச்சினில் எங்களுக்காக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்த ஓட்டுனர் இன்னோவா காருடன் காத்திருக்க, அங்கிருந்து சுமார் 250கீமீ தொலைவில் இருக்கும் பம்பை நோக்கி ஒரு வித வினோத உணர்வுடன் பயணப்பட்டோம். மலைப் பயணம் என்பதால் செல்லும் வழியெல்லாம் பசுமை. ஓடைகள்,  மரங்கள், வனவிலங்குகள் என மிக சந்தோஷ பயணம் அது. [வழியில், இங்க ஒரு வீடு எடுத்து Work From Home பண்ணலாம் என நாங்கள் பேசிக்கொண்டே போனது நினைவு வருகிறது]




போகும் வழியில் கேரளா உணவு  வகைகள், கொஞ்சம் தூக்கம், அங்காங்கே புகைப்படம், அவரவர் குடும்பத்தாருடன் தொலைபேசி உரையாடல்கள் , வாட்சாப்ப் தகவல் பரிமாறல்கள் என முடித்துக்கொண்டு ஒரு நான்கு மணி அளவில் பம்பை வந்தடைந்தோம். 



ஆச்சர்யம்!!!!  வெறும் 30 பேர் இருந்திருப்பார்கள், பம்பை நதி யாருமில்லாமல் அமைதியாய் பயணித்திக்கொண்டிருந்தது. நதி அருகே ஒரு மண்டபத்தில் சிலரும், பல காட்டுப்பன்றிகளும்  உலவிக்கொண்டிருந்தன, விசாரித்ததில் நடை திறப்பு 16 என்றும், நெய் அபிஷேகம் மறு நாள் காலை தான் என்றும் நாங்கள் ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டதாக கூறவும், ஒரு பெருமழை வரவும் சரியாக இருந்தது. அதிக பட்சம் ஐந்து நிமிடம் என் நினைக்கிறேன் மழை வருவதால் இன்று இரவு பம்பையில் தங்கிக்கொண்டு மறுநாள் காலை சபரிமலை ஏறுவது என்றும், அங்கு தங்கி இருமுடி முடித்துக்கொண்டு அடுத்த நாள் காலை நெய் அபிஷேகம் பார்த்துவிட்டு திரும்புவது என முடிவானது.

அடுத்த சில நிமிடங்களில் நதி ஒட்டி இருக்கும் கேரளா அரசாங்க அதிகாரிகள் தங்கியிருக்கும் அறை ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. பாழடைந்த கட்டிடம், அறை எங்கும் ஈரப்பதம், ஜன்னல் அத்தனையும் கயிறு கொண்டு கட்டியிருந்தார்கள். இருப்பதிலையே நல்ல அறை இது என்றார்கள்.!!!!

சமாளித்து, பொருட்களை அங்கே வைத்துவிட்டு பம்பையில் சென்று குளித்து வர கிளம்பினோம். விநாயகர் கோவில் பக்கத்தில் எங்கள் அறை. அங்கிருந்து கீழ இறங்கினால் பம்பை ஓடை அதை ஒட்டி எதிரில் ஒரு 30-40 கடைகள், நடுவில் நடைபாதை. அறையிலிருந்து விநாயகர் கோவில் வந்து வழிபட்டுவிட்டு கீழே சென்றோம். மழை வந்த ஈரம் வேறு சேர்ந்துகொள்ள கொஞ்சம் அசுத்தமாகவே இருந்தது வழி, தெரு நாய்கள் போல் பன்றிகள் வேறு உலவிக்கொண்டிருந்தது. நடந்து செல்ல செல்ல பார்த்தவை அனைத்தும் முக சுளிக்க வைத்தது. 

பம்பை நதி ஓரம் முழுவதும் மலம். 

கால் வைக்க முடியாத நிலை. வெறும் 20-30 மனிதர்களும் சில பன்றிகளும் இருக்கும் இடம் இவ்வளவு அசுத்தம்  என்றால், லட்சத்தில் பக்தர்கள் வரும் பொழுது அவர்கள் நிலை கண்டு ஒரு நிமிடம் அனைவரும் கலக்கமாணோம். சிறிது நேரம் எங்கே குளிப்பது என அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்க, ராஜேஷ் முகம் அஷ்ட கோணலாக போனது. என் மச்சி என்ன ஆச்சு என கேக்க, "டேய், அப்போசிட்ல இருக்குற கடை, ரூம்ல இருந்து மொத்தமா இங்க கலக்கராங்கடா, மஞ்ச கலர்ல அப்டியே கலக்குதுட" என சொல்லவும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. சுதாரித்து, இந்த பக்கமா அத பாக்காம வாடா, அஷோக் கிட்ட இத பத்தி பேசாத அவன் ஏற்கனவே பண்ணிய பார்த்து மூட் அவுட்ல இருக்கான் என் சொல்லி எங்கள் நடை வேகமானது. [நடைபாதை அடியில் பைப் அமைத்து பம்பை எதிர் பக்கத்தில் இருக்கும், அத்தனை கழிவுகளும் இங்க தான் சங்கமம், இதில் அங்கு இருக்கும் நான்கு கால் பன்றிகளுடயுது போனஸ். ]



நெடுந்தூரம் நதி ஓரத்தில் நடந்து சென்றோம். ஆள் அரவமற்ற ஒரு இடத்தில தண்ணீர் சுத்தமாக கீழ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்கே குளித்துவிட எங்கள் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. சிரமப்பட்டு திரும்ப எங்கள் அறைகளுக்கு வந்து சேர்ந்தோம். [எதையும் பார்க்காமல், எங்கும் நிற்காமல் ஒரே ஓட்டமாக வந்தோம்.] 

ராஜேஷின் BSNL மட்டும் அங்கே வொர்க் ஆக, அதிலிருந்து அனைவரும் அவரவர் அலுவலகம், வீடுகளுக்கு ஒரு நாள் தள்ளி போகும் தகவல் சொல்லிவிட்டு, ஏர் ஆசியா விமானத்தையும் ஒரு நாள் தள்ளி பதிவு பண்ணிவிட்டு, இரவு ஒரு 8 மணி அளவில் சாப்பிட திரும்ப கீழே சென்றோம். இருந்த ஒரு 4-5 கடைகளில் ஒரு கடை மட்டும் திறந்திருந்தது, அங்கேயும் வெறும் பரோட்டா தோசை. கொடுக்கப்பட்ட ப்ளேட் முழுவதும் மண், வாயில் வைக்க முடியாத உணவு. [நான் பத்து வருடங்களாக மூணு வேலையும் கடையில் சாப்பிடுபவன். ருசி அறியாது கிடைத்ததை பசிக்காக சாப்பிட்டு வரும் என்னாலேயே அந்த உணவை சாப்பிட முடியவில்லை.] கடையில் இருக்கும் அனைவரும் குடித்து வேறு இருந்தார்கள், இரண்டொரு வாயில் நிறுத்திக்கொண்டோம். ஆளுக்கு ஒரு டீ, பழம் என முடித்து கொண்டு, chocolate, பிஸ்கட், ஊதுபத்தி, 10 துண்டு என தேவையானவற்றை வாங்கிகொண்டு மீண்டும் ஓட்டமும் நடையுமாய் அறை வந்து சேர்ந்தோம்.

வாங்கி வந்த ஊதுபத்தி அனைத்தும் அங்காங்கே பத்த வைத்து, வாங்கிய அத்தனை துண்டுகளையும் அறை முழுக்க  விரித்துவிட்டு,அங்கு கட்டில் போல இருந்த பலகையிலும் விரித்துவிட்டு, நெடும் போராட்டத்துக்கு பிறகு இரவு 2-3 மணி அளவில் அனைவரும் தூங்கி எழுந்தோம்.

காலை, விநாயகர் கோவில் பக்கத்தில் இருக்கும் சபரிமலை அலுவலகத்தில் 100 ரூபாய் பணம் கட்டிவிட, அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் இருமுடி [மலையாளத்தில் கெட்டினிர என்கிறார்கள்] கட்டிவிடுகிறார்கள். நால்வரும் இருமுடி கட்டிக்கொண்டு, ஒரு தேங்காய் விநாயகருக்கு உடைத்துவிட்டு சபரிமலை ஏறத்தொடங்கினோம்.


எனது இருமுடியை எடுத்து கொண்டு சென்ற பையில் போட்டுக் கொண்டேன். மற்றவர்கள் இருமுடி கட்டி கொண்டு மலை ஏறினோம். பல முறை வெள்ளிங்கிரி மலை ஏறி பழக்கம் இருப்பதால், பெரிதாய் ஒன்றும் சிரமம் இல்லை. ஒரு சில மணி நேரங்களில், வழியில் இருக்கும் கடைகளில் கிடைத்ததை சாபிட்டுவிட்டு சபரிமலை வந்தடைந்தோம்.



ஒரு 200 பேர் தான் இருந்திருப்பார்கள். பம்பையில் மிகுந்த சங்கடத்திற்கு பிறகு மேல வந்த எங்களுக்கு மேலும் அதிர்ச்சி. அசாதரணமாக ஒரு 20-30 காட்டு பன்றிகள் சுத்திக்கொண்டிருந்தன, அங்கு கிடக்கும் அனைத்தையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தன, தனியாய் யாரேனும் உட்கார்ந்திருக்க அவர்களை விரட்டி விட்டு அங்க இருக்கும் பூஜை தேங்காய்களை தின்றுகொண்டிருந்தன. அனைத்திற்கும் மகுடம், 18 படி பக்கத்தில் சர்வ சாதரணமாக பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன.
நாங்கள் அனைவரும் சற்று வெறுத்தே போயிருந்தோம்.




சகித்துக்கொண்டு அஷோக் யாரிடமோ பேசி ஒரு அறை வாடகைக்கு எடுத்தாகிவிட்டது. மிகுந்த கலைப்பானதால் அனைவரும் சற்று ஓய்வெடுத்துக்கொண்டோம். தங்கி இருந்த அறையில் இருந்து 18 படி பார்க்கும்படி இருந்தது. ஒரு 5 மணி அளவில் கூட்டம் வர தொடங்கியதை அறையிலிருந்தே பார்த்துவிட்டு, நாங்களும் இருமுடி எடுத்து நெய் அரப்பு முடித்துவிடுவோம் என கிளம்பிவிட்டோம். ஹோட்டல் உதவியாளர் வந்தார்... சார் நான் எல்லாம் பண்ணி தரேன் நீங்க கூட வாங்க என கூடிக்கொண்டு சென்றார். எங்களை 18 படி ஏறி சொல்லிவிட்டு அவர் வேறு வழியில் மேல சென்றார், நாங்கள் ஒரு தேங்காயை உடைத்துவிட்டு, சரணகோசத்தோடு 18 படி ஏறினோம். ஏறின இடத்திலயே அவர் நின்றிருந்தார். சுமார் 1000 நபர்கள் இருந்திருக்கக்கூடும், 18 படி ஏறி, இடது புறமாக இருக்கும் படி ஏறி சுற்றி வந்து, நடுவில் இருக்கும் மூலவர் ஐயப்பனை காண வேண்டும். இடது புறமாக ஒரு படி நேராக நடுவில் இருக்கும் ஐயப்பன் முன் முடிகிறது. அங்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்களுடன் வந்தவர் எதோ ஒரு ரசீதை அவரிடம் காண்பிக்க கதவு திறக்கப்பட்டது , நாங்கள் நால்வர் மட்டும் அதில் சென்று ஐயப்பன் முன் முதல் முதலாய் தரிசனம். [குறுக்கு வழியில் சென்றதற்கு எத்தனை பேர் எங்களை சபித்தார்கள் என தெரியாது.] யாரும் தொந்தரவு செய்யவில்லை, ஆத்மார்த்தமாய் ஓரிரு நிபிடங்கள் தரிசனம் முடித்துவிட்டு, கீழே வந்து நெய் தேங்காய் உடைத்து, அங்கே ஒரு பாத்திரம் வாங்கி அதில் நிரப்பி  விட்டுவிட்டு, மலையில் இருக்கும் மற்ற சின்ன கோவில்களில் தரிசனம் முடிக்க மணி 8 இருக்கும். நல்ல கூட்டம் சேர்ந்திருந்து  அப்பொழுது,கோவில் பாடல்கள் ஒளிபரப்பபட, மனித கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது, எங்களுக்கும் கொஞ்சம் கோவில் வந்து சேர்ந்த உணர்வு மேலோங்கியது.





அனைத்தும் முடித்துவிட்டு, இரவு அறைக்கு சென்று 18 படி பார்த்துகொண்டே கதை பேசிகொண்டிருந்தோம், உதவியாளர் வந்தார், நாங்கள் எடுத்து வைத்திருந்த நெய்யை வாங்கி கொண்டு, காலைல 4 மணிக்கு ரெடிஆகிடுங்க நெய் அபிஷேகம் பார்க்க கூட்டிட்டுப்போறேன். ஒடச்ச நெய் தேங்காயே 18 படி முன்னால இருக்க தீயில போட்ருங்க என சொல்லிவிட்டு சென்றார். அஷோக்கும் ராஜேஷும் சோர்ந்துவிட , நானும் கணேஷும் நால்வரின் நெய் தேங்காயை தீயில் போட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை மேல சென்றோம். ஒரு 30-40 நபர்கள் மட்டுமே இருந்தார்கள், நேராக ஐயப்பன் சந்நிதானம் முன் சென்று நின்று கொண்டு ஆத்மார்த்தமாய் ஒரு 10-20 நிமிட தரிசனம். இன்னும் அந்த சிறிய வெண்ணிற ஹரிஹரசுதன் உருவம் கண்ணில் நிற்கிறது. !! தெய்வ தரிசனம் அது.



போக மனமில்லாமல் அறை சென்று தூங்கி அதிகாலை 4-5 மணிக்கு நாங்கள் தயாராகவும், உதவியாளர் வரவும் சரியாக இருந்தது. வெளிய சென்று பார்க்க நல்ல  கூட்டம், ஆயிரத்தில் மனிதர்கள் இருமுடியோடு வந்து கொண்டிருந்தார்கள். நல்ல ரம்யமான ஒரு காலை பொழுது, பூத்தூவல் போல மழை, நல்ல  குளிர், அதிகாலை,மலை முகடு, முந்தய இரவு அமோக தரிசனம் என அனைத்துமாய் ஒரு ஆனந்தத்தை தந்து கொண்டிருந்தது. நாங்கள் மீண்டும் அதே வழி, மேல ஏறியவுடன் இடது புற கதவு திறக்கப்பட மேல ஏறி நேராக ஐயப்பன் முன் தரிசனம். (விஜய் டிவி சமையல் புகழ் வெங்கடேஷ் பட் எங்கள் அருகில் நின்றுகொண்டிருந்தார், அவருடன் இரண்டு சினிமா பிரபலம் இருந்தனர் ஆனால் சரியாக நினைவில்லை யாரென்று ] 

அந்த அதிகலை ஆனந்தத்தில், நெய் வாசமும் சேர்ந்து  கொண்டது, ஐயப்பன் சிலை முன்பு இடது புறத்தில் ஒரு 5 ஐயர்களும், வலது புறத்தில் ஒரு 5 ஐயர்களும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கொடுக்கப்படும் நெய் பாத்திரங்கள் ஒவ்வொரு ஐயர் கை மாறி, ஐயப்பனுக்கு சென்றடைகிறது. அபிஷேகமான நெய் எதிர் வரிசையில் இருக்கும் ஐயர் கை மாறி கொடுத்தவரிடம் வந்து சேர்கிறது. எங்கள் நெய் பாத்திரங்கள் அதே முறையில் சென்று வந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும், முன்னே நின்று கொண்டிருந்த எங்களை யாரும் எதுவும் சொல்லவில்லை, நாங்கள் சற்றே தரையில் அமர்ந்தாவாறு நெய் அபிஷேகம் ஆகிக்கொண்டிருக்கும் ஐயப்பனை பரமானந்தத்துடன் மெய் சிலிர்க்க தரிசித்தோம். விரத  சிரமங்கள், நெடிய பயணம், முகம் சுளிக்க பட்ட அத்தனை அவஸ்தைகளும் மறந்தே போயின அந்த நொடியில்.
இத்தனை லச்சம் பேர் இங்கே வருவதற்கான ஈர்ப்பு எதனால் என அப்பொழுது உணர்ந்துகொண்டேன்.

இறங்க மனமில்லாமல், அந்த காலை பொழுதினை உள்வாங்கிக்கொண்டு அறை சென்று அனைத்தும் கட்டிக்கொண்டு, ஒரு 30-45 நிமிடத்தில் கீழே பம்பை வந்தடைந்தோம். அங்கே முந்தய நாள் இருமுடி கட்டிக்கொண்ட விநாயகர் கோவிலில் எங்கள் மாலைகளை கழட்டிவிட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைத்து சபரிமலை விரதத்தை முடித்துகொண்டோம்.
அங்கிருந்து கொச்சின் விமான நிலைய பயணம். சற்று நேரம் இருந்ததால் அருகில் இருந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று ஒரு விசிட்  அடித்துவிட்டு, இரவு ஒரு 12 மணி அளவில் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஒரு 1 மணி நேரத்தில் பெங்களூரு விமான நிலையம். அங்கிருந்து நிறுத்தி வைத்திருந்த காரில் திரும்ப அவரவர் வீடு வந்தடைந்தோம்.



இத்தனை சௌகர்யங்களுடன் சென்ற எங்களுக்கே, இந்த விரதமும்,பயணமும் மிக சவாலாய் இருந்தது. ஏதும் இல்லாமல் வண்டி கட்டிக்கொண்டும், நடை பயணமாகவும் இத்தனை வருடமாய் சென்று வந்தவர்களை நினைக்கையில் பிரமிப்பாய் இருக்கிறது. 

இத்தனையும் மணிகண்டன், ஐயப்பன் தரிசனத்திற்காக மட்டுமே!!

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

வார்த்தைகளின் கணம் உணரத்தொடங்குகிறது....

PS:
கோவிலை சுற்றி எங்கும் கழிப்பிட வசதி இல்லை, பம்பை ஏகதேசம் ஒரு அடுத்த கூவம் போல ஆகிவிட்டது, சரியான உணவு மற்றும் தாங்கும் விடுதிகள் இல்லை பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவதை காண முடிகிறது.  அரசாங்கமோ, தேவஸ்தான ஆட்களோ தங்கள் மெத்தனத்தை குறைத்து கொண்டு சிறிதேனும் சீர்படுத்தினால் நல்லது. [சமீபகாலமாக பெண்களும் பெரிய அளவில் வரத்தொடங்கியுள்ளர்கள்.]

Thursday, April 24, 2014

ஏக்கம்

என் மௌனங்கள் பேசித்தான்
தவிக்கின்றது உன் கண்களோடு !

Tuesday, March 18, 2014

திருவண்ணாமலை

ஒரு வாரமாகவே வலைப்பூவில் பதிவிடவேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஷக்லேச்பூர் அருகே காட்டிற்குள் தங்கி இருந்ததையும், திருவண்ணாமலை சென்றதையும்., கடந்த வெள்ளிக்கிழமை புதிய போர்ட் ஈகோஸ்போர்ட் வண்டி வாங்கியதை பற்றியும் எழுத வேண்டும் என அவ்வப்போது எண்ணிக்கொண்டிருந்தேன். 

புதிதாய் சேர்ந்த கம்பெனியில் வேலை நேரம் போக, சாயுங்காலம் தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு வரும்பொழுதே மணி எட்டரை ஆகிவிடும். பின்னர் உணவு முடித்து, மேல் மாடி வீட்டில் ஒரு மணிநேரம் சீட்டாட்டம் வேறு. பக்கத்துக்கு வீடு எதிர்த்தவீடு என எழு எட்டு பேர் அவர் வீட்டில் தினமும் சங்கமம். சிவராத்திரி அன்று விடியற்காலை மூன்று மணி வரை சீட்டாடியது நினைவு வருகிறது.

இவை அனைத்தும் முடித்திவிட்டு வீடு வந்து அமெரிக்க முதலாளிகளின் மெயில் ஏதேனும் வந்திருந்தால் அதற்கான வேலை முடித்துவிட்டு படுக்கும்போது மணி இரண்டு இரண்டரை ஆகிவிடிகிறது. இதில் நேரமில்லாமல் சுற்றிக்கொண்டு எழுத முடியவில்லை. இன்று வழக்கம்போல் எல்லா வேலைகளும் முடித்துவிட்டு மேல் சென்று நீங்கள் ஆடுங்கள் எனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு திருவண்ணாமலை பற்றி எழுத தொடங்கிவிட்டேன்.

பல முறை திருவண்ணாமலை சென்றிருந்தாலும் கிரிவலத்திற்கு இது இரண்டாவது முறை. முதல் முறை பௌர்ணமி அன்று.



பிப்ரவரி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை இரவு வர அன்று நண்பர்கள் எல்லோரும் போவது என்று முடிவு பண்ணி ஒரு வாரம் முன்னதாகவே பேசி வைத்துகொண்டோம். வெள்ளிக்கிழமை சாயுங்காலம் உணவு முடித்துவிட்டு எட்டு மணி அளவில் கிளம்புவது என்றும் திருவண்ணாமலை பனிரெண்டு மணிக்கு சேர்ந்து காலை ஐந்து மணிக்குள் கிரிவலம் முடித்துவிட்டு வீடு திரும்புவதென்றும் தோராயமாக கணக்கு.
வியாழக்கிழமை இரவு பெரோசும் ராஜேஷும் தங்களுக்கு சனி ஞாயிறு வேறு வேலை வந்துள்ளதாக சொல்லி கிளம்பிவிட நான், பாலா மற்றும் அசோக் மூவரும் பேசியபடி கிளம்பிவிடுவததென்று முடிவு பண்ணிவிட்டு அசோக், பெரோஸ் வீட்டிலேயே தூங்க நான் பாலா அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம்.

வீடு செல்லும்போது முதல் மாடியில் புதிதாய் குடி வந்திருக்கும் முத்து எதற்கோ கீழே வர நானும் சற்று பேசிவிட்டு திருவண்ணாமலை போவதை சொல்ல அவரும், நானும் வருகிறேன் என்றார். சரி மூன்று பேர்தானே இவரும் வரட்டும், வாங்க என்றேன். அவரும் போய் ஒரு முறை என் மனைவியும் வருகிறாளா என கேட்டுவிட்டு வருகிறேன் என கேட்டு வந்து பின் இவர் மட்டும் வருவது உறுதியாகியது. நண்பர்கள் குழுவிற்கு வாட்சாப்பில்  தகவல் கொடுத்துவிட்டு தூங்கி அடுத்த நாள் ஆபீஸ் போய் இருப்பு கொள்ளாமல் மதியம் ஒரு இரண்டு மணியளவில் வீடு வந்துவிட்டேன்.

எதிர் வீட்டில் இருக்கும் கல்கத்தா நண்பர் (நாங்கள் அவரை ப்ரோ என அழைப்போம். அவர் பெயர் ஞாபகமில்லை. ஒரு இரண்டு வருடங்களாகவே ப்ரோ என அழைத்து இப்பொழுதுதான் அவர் பெயர் தெரியாததே உணர்கிறேன் J) ப்ரோ நான் ரெடி எப்போ கெளம்பலாம் என்றான். நாயகன் படத்தில் பாப்பா மர்கயா என் சொல்லி வரும் ஒரு பாத்திரம் போலவே ஒரு பச்சை ஜிப்பாவும் வெள்ளை பேண்டும் போட்டுக்கொண்டு நின்றார். இவன் எங்க இப்டி நிக்கிறானு, அசோக்குக்கு போன் பண்ணி

நான்      : யோவ் பாப்பா மர்கயா ரெடியா நிக்கிது என்ன மேட்டர்.
அசோக்   : நைட் நீங்க போனதுக்கப்புறம் வந்தாண்ட, நானும் வரேன்  
            சொன்னான் சரி மூனுபேர்தானே வானேன் ஏன்டா.
நான்      : நானும் மூணு பேருன்னு முத்துவ வர சொல்லிட்டேன்    
            அவரு எழு மணிக்கு ரெடி ஆகிருவேனாறு.
அசோக்   : சில்ரடா நீ.
நான்      : ஆமா நீ பெரிய நோட்டு. என்ன பண்ணலாம் அஞ்சு 
            பேராயிருச்சு. மர்கயாவ போட்ரலாமா??
அசோக்   : பாவம்டா. ஷிப்ட் எல்லாம் ஏதோ மாத்திவிட்டுட்டு 
            வந்திருக்கான். அட்ஜஸ்ட் பண்ணி போயிர்லாம்.
நான்      : சரி விடு. சீக்கிரம் வா நாங்க வந்தாச்சு.
அசோக்   : டேய் நான் ஆபீஸ் போகல. வீட்ல தான் இருக்கேன்.(நீ எப்ப 
           போன) சரி குளிச்சிட்டு சீக்கிரம் வரேன்.
நான்      : ஓகே மச்சி. வரும்போது எனக்கு ஒரு வேட்டி எடுத்துட்டு  
          வா. கேரளா மாப்ளை, கல்யான் ஜெவ்ல்லர்ஸ், ஏகப்பட்டது 
          வச்சிருப்பயே.
அசோக்    : போடா !@#$@#!$#@$

சிறிது நேரம் வீட்டின் வெளிய நின்று அரட்டை அடித்துவிட்டு நான் குளித்து வரவும் அசோக் பாலா ரெடி ஆகி வரவும் சரியாக இருந்தது. அவர்கள் இருவரும் வேஷ்டி சட்டை. அசோக் எனக்கு ஒரு நாலு முழ வேஷ்டியும் ஒரு எட்டு முழ வேஷ்டியும் கொண்டுவந்திருந்தார். அதில் ஒன்றை வாங்கி கட்டிக்கொண்டு, மற்ற நண்பர்கள் வர புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நாங்கள் தயார்.



முத்து மேல் மாடியிலிருந்து பேண்ட்டோடு வர,

பாலா :     யோவ் நாங்கெல்லாம் எப்டி இருக்றோம் போய் மாத்திட்டு வாயா.

அவரும் சென்று வேஷ்டி கட்டிக்கொண்டு வர,  அன்று எங்கள் வீதியே அல்லகோலப்பட்டது. அசோக் தன் ஸ்கோடா ராபிட் காரில் வந்திருந்தார். நாங்கள் நால்வர் மற்றும் ப்ரோ என ஐந்து பேரும் ஒரு எட்டு மணி அளவில் பயணம் ஆரம்பம்.

இரண்டு மணி நேரத்தில் கிருஷ்ணகிரி பக்கத்தில் மெக் டொனல்ட்ஸ் இருக்கும் உணவு விடுதியில் இரவு உணவுக்கு நிறுத்தினோம். தமிழ்நாட்டு வட கரி உணவகம் ஒன்று பக்கத்தில் இருக்க அங்கு சென்று ஒரு பிடி பிடித்தோம். தண்ணீர் கொஞ்சம் நொறுக்கு தீனி என அங்கே மூட்டை கட்டிக்கொண்டு கிளம்ப தயாரானோம்.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நிறைய பேர் சொல்லி இருந்தனர். ஒரு வருடத்திருக்கு முன்பு அம்மாவை அழைத்துக்கொண்டு மாற்று வழியில் திருவண்ணாமலை சென்றது ஞாபகம் வர கூகிள் துணையோடு வேறு மாற்று வழி தேடத்தொடங்கினோம். ஒரு முப்பது கிலோமீட்டர் தூரம் அதிகம் என்றாலும் கீழே இருக்கும் இந்த வழி சுப்பர். இடையில் ஒரு ஐந்து கிலோமீட்டர் பொத்தல் சாலை தவிர்த்து கிருஷ்ணகிரி முதல் திருவண்ணாமலை வரை குண்டு குழியற்ற சாலை.  வளைவுகள் இருந்தாலும் ஒரு தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் அனாயசமாக செல்லலாம்.



பெங்களூர் -> ஹோசூர் -> கிருஷ்ணகிரி -> கரிமங்கலம் -> மொரப்பூர் -> ஹரூர் -> திருவண்ணாமலை.

ஆங்காங்கே இடையில் தேனீர் கொஞ்சம் ரெஸ்ட் என ஒரு பனிரெண்டரை மணி அளவில் திருவண்ணாமலை சென்றடைந்தோம். கூட்டம் அவ்வளவாக தெரியவில்லை. காரை நிறித்துவிட்டு செருப்பு, கைபேசி, பணம் போன்றவற்றை ஒழுங்கு பண்ணிவிட்டு கிரிவலத்திற்கு அயத்தமாணோம்.

கிரிவலம் தொடங்கும் இடத்துக்கும் நாங்கள் காரை நிறுத்திய இடத்திற்க்கும் ஒரு இரண்டு கிலோமீட்டர் இருந்திருக்கும். நடந்து செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது. அருகில் இருக்கும் காவலரிடும் நான் சென்று “கூட்டங்களா” என்றேன். இப்போ ஒண்ணும் இல்லப்பா சாயந்தரம் இத விட பத்து மடங்கு கூட்டம். !!!! அடங்கப்பா !!!! இரவு ஒரு மணிக்கு நாங்கள் பார்த்தது லட்சம் பேர் இருந்திருக்ககூடும். அப்போ ஒரு ஐந்து லட்சம் பேராவது இன்று கிரிவலம் வந்திருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் இதே கூட்டம். காவல் துரையினர் திருவண்ணாமலை ஊரில் வசிப்பவர்கள் படும் பாடு என்னவாக இருக்கும்?? பாவம் அவர்கள்.

முட்டி மோதி கிரிவலம் ஆரம்ப இடத்திருக்கு வந்து கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு [ஒரு காவலாளி: வாங்க வாங்க நிக்காதீங்க நல்லவன் மாதிரி தான் இருப்பான் டக்குன்னு சங்கிலி அறுத்துட்டு ஓட்டிடுவான். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன் நிக்காதீங்க நடங்க நடங்க ..... மனம் ஏனோ பண்ணியது.] விளக்கு ஏற்றிவிட்டு எங்கள் நடை பயணம் துவங்கும்போது மணி ஒரு இரண்டு இருந்திருக்கும்.
-







வீதியெங்கும் குப்பை கூலம். கரும்பு ஜூஸ், தேநீர், சர்பத், இளநீர், உணவு தட்டு, விளம்பர காகிதங்கள் என வழி நெடுகிலும் குப்பை. ஒரு கடைக்கும் இன்னொரு கடைக்கும் இடைவெளி இல்லாத அளவிற்கு கடைகள். பொருட்காட்சி திடல் போல் இருந்தது மொத்த கிரிவல பாதையும். போகும் வழியில் பேருந்து நிலையம், அவர்கள் சவுகரியத்திற்கு ஓட்டுகிறார்கள். கிரிவலம் செல்பவர்களும் போகும் பேருந்தில் ஏறிக்கொண்டு கொஞ்ச தூரம் அதிலேயே சென்று பின் இறங்கி நடை தொடர்கிறார்கள். என்னே பக்தி. நித்தியானந்தவின் குடில் வேறு போகும் வழியில்.
வெள்ளையர்கள் நிறையேவே வந்திருந்தார்கள். அவர்களும் அதே கிரிவல பாதையில் மிகுந்த சிரமத்தோடு நேர்த்தி செலுத்தினர். சரியாக ஒரு எழு கிலோமீட்டர் கிரிவலம் முடியும் பொழுது மலையின் பின்புறம் வந்திருப்போம். நிலவொளியில் மலை மிக அழகாக இருந்தது. போகும்போது இதை ரசிக்க மறந்துவிடாதீர்கள்.


ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரு சிவலிங்கம் என பனிரெண்டு ராசிக்கும் ஒரு லிங்க தரிசனம் என ஆங்கங்கே போர்டு வைத்துள்ளர்கள். சிலர் போகும் பாதையில் இருக்கும் எல்லா சிவனையும் தரிசித்து செல்கிறார்கள், சிலர் தங்கள் ராசிக்கு உண்டான சிவனை தரிசித்திவிட்டு செல்கிறார்கள். சிலர் ஓட்டமும் நடையுமாய் சுற்றி வருகிறார்கள்.


நாங்களும் மெதுவாக ஆங்காங்கு ஓய்வெடுத்து ஒரு ஐந்து மணி அளவில் கிரிவலம் முடித்தோம். அசோக் காலில் அடிபட கொஞ்சம் நொண்டி நொண்டி வந்து சேர்ந்தார். கோவில் உள்ளே செல்லலாம் என பார்த்தால் கூட்டம். அஷோக்கும் பாலாவும் நாங்கள் வரவில்லை என சொல்லி காரில் சென்று தூங்கிவிட்டனர். நான், ப்ரோ, முத்து மூவரும் உள்ளே சென்று நல்லதாய் ஒரு தரிசனம் முடித்துவிட்டு காருக்கு செல்லும்போது மணி ஒரு ஏழரை. 





அம்மாவிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துவிட்டு வந்தே வழியே எங்கள் பயணம் தொடர்ந்தது. ஒரு எட்டு மணி அளவில் நண்பர் பிரின்ஸ் சென்னையில் இருந்து அழைத்தார்.

பிரின்ஸ்   :டேய் நான் பெங்களூர் வரேன் கார எடுத்துட்டேன், நீங்க எத்தன மணிக்கு வருவீங்க???
நாங்கள்    : இப்போதான் வண்டி எடுக்றோம். சாப்டுட்டு அப்டியே வர மதியம் ஆகிடும்.
பிரின்ஸ்   : சரி நான் கிருஷ்ணகிரி காபி டேவில் வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க.

மாற்றி மாற்றி வண்டி ஒட்டி, கொஞ்சம் களைப்புடன் கிருஷ்ணகிரி காபி டே வர மணி சுமார் மதியம் பனிரெண்டு இருந்திருக்கும். பிரின்ஸ்  காரில் தூங்கி கொண்டிருக்க நாங்களும் வந்து சேர்ந்து அனைவரும் தேனீர் அருந்திவிட்டு இரண்டு காரிலும் மூன்று மூன்று பேராக ஒரு இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

மதிய உணவை முடித்துவிட்டு கொஞ்சம் வெட்டி பேச்சு என் அன்றைய தினத்தில் உறங்கும் பொழுது இரவு ஒரு மணி. முதல் முறையாக தொடர்ந்து ஒரு நாற்பத்தெட்டு மணிநேரம் தூங்காமல் இருந்தாலும் மனம் சிவமயத்தால் நிறைந்திருந்தது. (கோவை அருகே வெள்ளியங்கிரி மலை ஏறியதும் அதன் அடுத்த வாரமே திருப்பதி மலை ஏறி இறங்கியது பற்றியும் எழுதவேண்டும்...)


பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா  
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து 
உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் 
வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா 
உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே


சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - 
இறைவா சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - 
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை 
பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - 
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை 
பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை  
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை - 
அந்த அம்மையில்லாமல் இந்தப் பிள்ளையில்லை
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...