Wednesday, October 26, 2016

பிரிவு

துவண்டு நின்றபோதெல்லாம் தோள் கொடுத்த தூயவளே....
பிரிவின் கோரைப்பற்களின் வலி பொறுக்க முயல்கிறேன்!!
நேரத்தில் சாப்பிடு நேரத்தில் தூங்கு-
எளிதில் சொல்லிவிடுகிறாய் தொலைபேசியின் வழியே…
நிச்சயம் முடிவதில்லை நீ இல்லாத நாட்களில்!

அருகிலிருந்து ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களில்
அமைதியாய் தூங்கிவிடுகிறேன்!
இல்லா நாட்களில் தனிமை இரைச்சலில் தவிக்கிறேன்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடவேண்டும்
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கவேண்டும்..
கண்டித்து ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டவேண்டும்
சிறுபிள்ளைபோல் மடியில் படுத்துக்கொண்டு எழ மறுப்பேன்..
யார் பார்க்கின் பதறி எழுந்து, நிலை உணர்ந்து சிரிக்கவேண்டும்!!
மறைந்திருந்து கொஞ்ச வேண்டும்...

கையிலிருப்பதை தட்டிப்பறிக்க வேண்டும்
மிஞ்ச வேண்டும்.. அழ வேண்டும்… அணைக்க வேண்டும்
கண்டிக்க வேண்டும்… இடை கிள்ள வேண்டும்…
அரைகுறையாய் துவட்டிய துண்டை
என் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போகவேண்டும்
கழுத்தில் முடி விலக்கும் என் மூச்சுக்காற்று
நீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தவேண்டும்

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா?
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழ வெகு காலம் உள்ளது
விட்டுகொடுத்து...
தொட்டு பிடித்து...
தேவை அறிந்து...
சேவை புரிந்து...
எனக்காய் நீ விழித்து...
உனக்காய் நான் உழைத்து...
வாழ வேண்டும்
சீக்கிரம் வா…
தனியாய் வந்து
துணையாய் வாழும்
தாயே!!

Friday, June 17, 2016

அப்பா!



என்னுடைய
உச்சரிப்பு அகராதியிலிருந்து
உதிர்ந்துவிட்டது
அப்பா என்ற சொல்!

அவர் எரிந்து
எட்டு வருஷமாச்சு.

நான் வைத்த கொள்ளிக்குத் தப்பி.
அப்பாவின் சில துணிகளும்
ஒரு மூக்கு கண்ணாடியும்
பத்திரம்!!!

அறுபதுகளின்
ஆண்மகன் நீ!

உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்

உன்
குழந்தையாகிய என்னிடம் நீ
கோவப்பட்டதில்லை!
ஆனால்
உன் குழந்தைச் சேட்டைகளைக் கண்டு
நான் கோவப்பட்டிருக்கின்றேன்

நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

கடவுள் இல்லை
சிவாஜி பிடிக்கும்
என்பாய் நீ.
கடவுள் உண்டு
சிவாஜி பிடிக்காது
பொய் சொல்வேன் நான்.

படபடக்க செல்லும் ஸ்கூட்டர்..
சுருட்டை முடி ..
தினமலர் படிக்கையில்
அது சுருட்டும் நீ...

நினைத்துப்பார்க்கின்ற எல்லாமே
துக்கத்தை தருவதால்…
உன் நினைவுகளுக்குப் பிறகு
எனக்கு
தூக்கத்தை தரட்டும் இறைவன்!

எத்தனை பேர் இருந்தாலும்
நீ இல்லாத நம் வீடு
மூலவர் இல்லாத
கர்பக்கிரகமாகவே இருக்கிறது

நம்பிக்கையிருக்கிறது
தண்ணீரில் கலந்த உன் அஸ்தி..
எந்த விளைநிலத்திலோ
அமோக விளைச்சல் கொண்டிருப்பதால் !

மறுபடியும் வா
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்...