Wednesday, February 24, 2010

சச்சின் - 200!!!

மதியம் உணவருந்தி கொண்டிருக்கையில் அலுவல் தொலைகாட்சியில் 2010 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கை ஓடிகொண்டிருந்தது... சற்று நேரம் அதை கவனித்துவிட்டு பின் அன்றாட வேலையில் மூழ்கிப்போனேன்.. மூன்று மணி அளவில் பட்ஜெட் சுருக்கத்தை பார்க்க எண்ணி வலைதளங்களில் மேய்ந்துகொண்டிருகையில் இன்றைய கிரிக்கெட் போட்டி கண்ணில் பட்டது.,

சச்சினின், தீவிர ரசிகனாக முதலில் நான் பார்த்தது சச்சின் அவுட்டா இல்லையா என்பதைத்தான். சச்சின் ஆடிகொண்டிருந்த மனநிறைவில் மேற்கொண்டு வேலையில் ஐக்கியமானேன். சுமார் ஐந்து மணி அளவில் மீண்டும் ஒருமுறை ஸ்கோர்ஐ பார்க்கையில் சச்சின் 186 ரன்களுடுன் ஆடிகொண்டிருக்க கட்டு படுத்த முடியாத ஆர்வத்தோடு நாலாவது மாடியில் இருக்கும் தொலைக்காட்சி அறைக்கு விரைந்தேன்... ஆச்சர்யம்!!!!

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட அலுவல் நண்பர்கள் ஏற்கனவே குழுமியிருந்தனர்.. உள்ள சென்ற என்னை கடைசி பெஞ்ச் கண்மணிகள் தள்ளி நிற்க சொல்லி கூச்சலிட என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே தொலைக்காட்சி முன்பு தரையில் உட்கார்ந்துகொண்டேன். சச்சின் அப்பொழுது 191 ரன்கள். ஒரு இரண்டு நிமிடங்களில் என்னோடு சேர்ந்து ஒரு இருபது நபர்கள் தரையில் அமர்ந்து கொண்டார்கள் ... [ஆட்டு கூட்டம் தான் ஞாபகத்திற்கு வந்தது]


அடுத்து தொடர்ச்சியாக இரண்டு, இரண்டு ரன்கள் சேர்க்க தற்பொழுதைய உலக சாதனையான 194 ரன்னை கடந்துவிட்டுருந்த சச்சினுக்கு விசில்களும் கூக்குரல்களும் பரிசாக நண்பர்கள் காற்று வழி அனுப்புவித்துகொண்டிருந்தனர். உற்சாகத்தில் நானும் தரையை விட்டு எழுந்தரிக்க பின்னிருந்த குரல்கள் என்னையும் என்னோட சேர்ந்தவர்களையும் அடக்கி கொண்டிருந்தனர்... ஆனால் சச்சினின் விஸ்வரூபம் தொடர்ந்துகொண்டிருந்தது...

டோனி அடித்த ஒவ்வொரு சிச்சர்களையும் சபித்து கொண்டு சச்சினுக்கு ஆட சந்தர்பம் கொடுக்க சொல்லி மேலும் அலறல்கள். இந்த நேரங்களில் மேலும் ஒரு நூறு நபர்கள் குழுமியிருந்தனர்.. கன்னடர்கள், தெலுங்கர்கள், வட மாநிலத்தவர் என் அங்கு ஒரு சங்கமம் நடந்து கொண்டிருந்தது.. ஒவ்வொருவரும் மற்றவருடன் அத்தனை அன்பு பாராட்டி மடியில் உட்காராத குறையாக கத்தி கொண்டிருந்தனர்.... தமிழகத்திற்கு காவேரி நதி நீர் அன்று கோரியிருந்தால் அத்தனை கன்னடர்களும் சரி என்றிருப்பார்கள் போலும்..


சில நிமிடங்களில் உலகம் இது வரை பார்த்திராத சாதனையை சச்சின் செய்து முடிக்க தரையில் இருந்து ஆகாயத்திற்கு அனைவரும் துள்ளி குதித்தனர். உலக அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருநூறு ரன்கள் என்ற மாபெரும் சாதனையை முதலில் செய்து காட்டியது ஒரு இந்தியன். ஆம் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இந்த வயதில் சச்சின் செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. [சிவசேனா அமைப்பினர் இந்த வெற்றியை மும்பை மக்கள் மட்டுமே ரசிக்க வேண்டும் என்று சொல்லுவாரோ என கொஞ்சம் பயமும் இருக்கிறது]. மிகச்சிறந்த இந்த சாதனைக்கு நம் தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்..

"SRK is like wine, the more its older the more its better."