Tuesday, December 3, 2013

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம்


சமீப காலமாக எதிர் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களுடனே அனேக நேரங்கள் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அறையில் படம் பார்ப்பது, சீட்டு விளையாடுவது, திரைஅரங்குகள் செல்வது, உணவருந்த செல்வது, அரட்டை அடிப்பது என மீண்டும் ஒரு கல்லூரி வாழ்க்கை தொடர்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது.

எப்பொழுதும் போல் அன்றும் எதோ உரையாடல் தொடங்கியது. நண்பர் ஒருவருக்கு அடிக்கடி அமுக்கான் (ஆழ்ந்த தூக்கம். திடீரென்று விழிப்பு. விழிப்பு, கண்களுக்கு இல்லை. நினைவலைகளுக்கு மட்டும். கைகளும் கால்களும் இயங்காது. யாரோ அமுத்தி பிடித்திருப்பது போல இருக்கும். மீண்டும் சிறிது நேரம் கழித்து, அதே விழிப்பு நிலை. அதே அமுக்கான்.
மனோ தத்துவ நிபுணர்கள், நம் தூக்கத்தை ஒரு சில பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள்.
  • இதில் பீட்டா நிலை என்பது, சாதாரண விழிப்பு நிலை.
  • ஆல்ஃபா நிலை என்பது, நாம் ரிலாக்ஸாக, கையை காலை நீட்டி சோம்பலாக படுத்திருக்கிறோமே அது.
  • அடுத்து தீட்டா நிலை என்பது, இங்கு தான் தூக்கம் ஆரம்பம் ஆகிறது. தீட்டா நிலையில் ஒருவர் தூங்கி, அதே நிலையில் எழுந்து விட்டால், ‘வெளிக்கண்ணு தான் முடியிருந்தது, ஆனால், உள்கண் மூடவில்லைஎன்பார்கள்.  
  • அடுத்த நிலை ஆழ்ந்த தூக்கம். இதை டெல்ட்டா நிலை என்கிறார்கள். இந்த டெல்ட்டா நிலையில் தான் தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்ற செயல்கள் நிகழ்கின்றன.
  • அடுத்ததாக சொல்வது ரெம் நிலையாகும். இது கொஞ்சம் சுவாரஸ்யமான நிலையாகும். அதாவது உள்கண் விழித்திருக்கும். ஆனால், உடலியக்கம் இருக்காது. இந்நிலையில் தான் கனவுகள் தோன்றும்.
எதேச்சையாக ரெம் நிலையில் இருந்து எழுபவர், உடனே, தன் கண்ட கனவை விவரிப்பதைப் பார்க்கலாம். பொதுவாக, ஒருவருக்கு தூக்கம் படி படியாக துவங்கி, படி படியாக ரிவர்ஸில் வந்து முடிவடைகிறது. டெல்ட்டா நிலையில் இருப்பவரை சுலபமாக எழுப்ப முடியாது. ஆனால், தீட்டா நிலையில் இருப்பவரை எழுப்பி விடலாம். அதனால், ஒரு மனிதர் குறிப்பிட்ட நேர தூக்கத்துக்கு பின், தீட்டா நிலைக்கு திரும்புகிறார், பின் ஆல்ஃபா நிலைக்கு வந்து, விழிப்புக்கு வருகிறார். பொதுவாக இது தான் நடக்கிறது, நாம் தூங்கும் போது..நான் இந்த ரெம் நிலையில் இருந்து தான் டெல்ட்டா மற்றும் தீட்டா நிலைக்கு வராமல், திடீரென்று விழித்திருக்க வேண்டும், அல்லது விழித்ததாக நினைத்திருக்கலாம்.)

வருவதைப் பற்றி விரிவாக பேசிக்கொண்டிருக்க இன்னொரு நண்பன் அதை ஜாதகத்துடன் ஒப்பிட்டு கடவுள் வழிபாடு என அமானுஷ்யங்கள் வரை அளவளாவினோம்.
 
கடைசியாக எல்லோரும் வந்து சேர்ந்த இடம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம். ஒருவரின் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட திருத்தலம். பிரம்மாவிற்கு இருக்கும் ஒரு சில தளங்களில் முக்கியமான ஒன்று. [மேற்படி தகவலுக்கு கூகுள் ஆண்டவரை தொடர்புகொள்ளுங்கள்.]

அதையும் இதையும் பேசி நவம்பர் 17 ஞாயிறன்று தரிசிப்பது என முடிவானது. வழக்கம்போல சிலர் வருகிறேன் என்றும் சிலர் வரவில்லை என்றும் ஏகப்பட்ட உரையாடல்கள், சமாதான முயற்சிகள்.

நண்பா, நவம்பர் 17 ஞாயிறு கார்த்திகை மகாதீபம், பௌர்ணமி வேறு போயே ஆகவேண்டும் என ராஜேஷ் சொல்ல எங்கள் அனைவருக்கும் அன்றுதான் போவது என்று முடிவானது. வராத நண்பர்களை வார்த்தை பேசிவிட்டு, சனி மதியம் ஒரு நான்கு மணி அளவில் நண்பர் அசோக்கின் ஸ்கோடா ராபிட் காரில் அசோக், நான், ராஜேஷ் மற்றும் பாலா பயணத்தை தொடங்கினோம். டீ குடித்துவிட்டு கார் எங்கள் வீடுகளை விட்டு செல்லும்போது மணி ஐந்து இருக்கும். மொத்தம் போக வர ஒரு அறுநூற்றைம்பது கிலோமீட்டர் பயணம், பேச்சலர் பசங்களுக்கு உண்டான அதே மனநிலையில் எதையும் யோசிக்காமல் எதையும் ப்ரீ-பிளான் பண்ணாமல், பிரஷ் டூத் பேஸ்ட் என எதுவும் இல்லாமல் காரில் ஏறி அமர்ந்து பயணப்பட்டோம். பொதுவாக ஒத்த கருத்துடைய நண்பர்கள், அடுத்தவர் விடயங்களில் தங்கள் கருத்தை திணிக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் அவரவர்களை அவரவர்களாகவே ஏற்றுக் கொண்டனர். (அரிது).

அசோக் கார் ஒட்டிக்கொண்டிருக்க முன் சீட்டில் நான். முதல் காரியமாக ஒரு போட்டோ எடுத்து முகநூளில் ஒரு பதிவு. பின்பு அம்மாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
.....நாங்க கிளம்பிவிட்டோம் நீ எங்கே..
.....நானாடா.. திருவண்ணாமலை கிரிவலம் வந்திருக்கிறேன்..
.....மகாதீபம், பத்து லட்சம் பேர் இருப்பாங்க, ஹெலன் புயல் வேற, ஒரே மழை, ஏம்மா இந்த கூட்டத்ல...
.....ரெண்டு தடவை வந்துட்டேன், இன்னொருக்க வருனும்னு இருந்துது சித்தி கூப்ட்டா வந்துட்டேன். சும்மா வீட்ல போர் அடிக்கும்னு வந்துட்டேன். (எனக்கு இன்னும் திருமணம் ஆகாத குறையை கடவுளிடம் வேண்டுகிறதை தவிர வேறு எதற்கும் இந்த சிரமம் இல்லை என்று எனக்கு தெரியும்......)
......சரி.. பாத்து போங்க.

நாங்கள் ஒரு ஐந்தரை மணி அளவில் கர்நாடக தமிழ்நாடு எல்லை வந்திருக்கக்கூடும்... ஹெலன் புயல் தன் வேலையை தொடங்கியது.. மழை.. பெருமழை... ஹோசூர் அருகே பாலம் வேலை வேறு நடைபெறுகிறது, கூடவே இந்த மழையும் சேர்ந்து ஹோசூர் தாண்டவே ஒரு இரண்டு மணிநேரம் ஆனது. கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் ஒரு காபி டேவில் நிறுத்தி அசோக் மதியம் சமைத்திருந்த புலாவை நான் சாப்பிட இவர்கள் காபி வடை என கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது. இரவு பத்து மணிக்கு சேலம். அங்கே உணவை முடிக்கையில் அம்மாவிடம் இருந்து அழைப்பு. கிரிவலம் முடிஞ்சிது, மழையெல்லாம் ஒன்னும் இல்லை பேசிகிட்டே முடிச்சிட்டோம். நாளைக்கு ஜோதி பாத்துட்டு கிளம்பிருவோம். சரிம்மா, நாங்களும் வந்துட்டோம், நாளைக்கு கூப்பிடு.

பின்பு நாமக்கல் வழியாக திருச்சி கடந்து அங்காங்கே தேனீர் அருந்திவிட்டு இரவு ஒன்றரை மணிக்கு திருபட்டூரில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றடைந்தோம். வழி நெடுகிலும் மழை.... மொத்தம் வந்த 7 மணி நேரத்தில் 5-6 மணிநேரம் மழை பெய்திருக்கக்கூடும்.. (திருச்சி சமயபுரம் கோவிலில் இருந்து ஒரு இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது).

மிகச்சிறிய ஊர். 3300 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் பௌர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு நால்வரும் ஒரு வித வினோத மனநிலையில் இறங்கி சுற்ற ஆரம்பித்தோம். ஆள் அரவமற்று இருந்தது கோவில். 

பெரும் நிசப்தம், பழமையான கோவில், நால்வர் நாங்கள், நிலவொளி, இரவின் அமைதி என அனைத்தும் சேர்ந்து ஒரு இனம் புரியாத சந்தோஷத்தில் என்னுடைய இதயத்துடிப்பும் சற்று அதிகரித்திருந்தது... கோவில் வலப்புறம் ஒரு ஒற்றை மரம் பார்த்தவுடன் ஈர்க்க அங்கு சென்று பார்த்தோம். ஒரு பெரும் குளம். கொஞ்சம் தண்ணீர்.. இருப்பினும் ஒரு ஐநூறு தவளைகள் இருந்திருக்கக்கூடும்.. இந்த காணொளியை பார்ப்பின் இரவில் தவளையின் ரீங்காரம் எப்படி இருக்கும் என புரியும். இது எடுக்கும் போது இரவு 2 மணி இருந்திருக்கும்.


சற்று நேரம் அங்கிருந்துவிட்டு கோவில் பக்கத்தில் தங்க இடம் தேடினோம்.. கோவில் அருகிலே ஒரு மண்டபம் டைல்ஸ் பதித்து நன்றாக இருந்தது, ஆனால் எங்களிடம் தூங்குவதற்குண்டான எதுவும் இல்லை. நல்ல குளிர் வேறு. தங்குவது சிரமம் என உணர்ந்துகொண்டு திருச்சி சென்று ஹோட்டலில் தங்குவது என முடிவெடுத்துவிட்டு கோவிலை எங்கள் போக்கில் சுற்றி வந்து கொண்டிருந்தோம். நாய்கள் குறைச்சலில் உள்ளூர் காவல் படை தடியோடு எங்களை விசாரிக்க வந்த விடயங்களை விளக்கிவிட்டு இரண்டு மூன்று சுற்றுகளுடன் திருச்சி சென்னை ரூட்டில் ஒரு சின்ன ஹோட்டலில் இரண்டு அறை எடுத்து படுக்க போகையில் மணி 3:30. 

மச்சி காலைல எட்டு மணிக்கு பௌர்ணமி பூஜை, ஒரு அஞ்சரைக்கு கெளம்பலாமா? சின்ன பார்வை பார்த்துவிட்டு, மொதல்ல ரூமவிட்டு வெளிய போங்கடா நான் போய் தூங்கறேன்.!!

சரியாக மணி ஐந்து இருக்கும். அஷோக்கும் பாலாவும், ரூம் மின் விசிறி கோளாறு எங்களுக்கு தூக்கம் வரல நீங்களும் எந்த்ரீங்கடானு ஆரம்பிக்க, நல்ல இருப்பீங்கடானு எல்லாரும் எந்திரிச்சு குளிச்சு, சாப்ட்டு காலை எட்டு மணிக்கு கோவிலில் ஆஜர்.

வாசலில் முருகன் சன்னதி, அங்கேதான் அனைவரும் தீபம் ஏற்ற வேண்டும். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குண்டான பிரார்த்தனைகளுடன் எங்களுக்கு தேவையான தீபங்களை ஏற்றிவிட்டு கோவில் உள்ளே சென்றோம். மூலவர் சுயம்பு லிங்கம், பக்கத்தில் பிரம்மாவின் கோவில் மண்டபம் அதில் பெரிய நான்முகன் சிலை. அதற்கும் பக்கத்தில் கோவில் மண்டபத்திற்கு உள்ளயே யோகா குரு பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி.


பிரம்மா மண்டபத்தில் பூஜை தொடங்கியிருந்தார்கள். அளவான கூட்டம். நாங்கள் முதலில் சிவனை தரிசித்துவிட்டு பின் பிரம்மா மண்டபத்தில் வந்து பூஜை செய்வதை பார்த்துகொண்டே அமர்ந்து கொண்டோம். ஒரு அரை மணி நேர பூஜை, பிறகு மூத்த அர்ச்சகர் ஒருவர் கோவிலின் சிறப்பையும் வழிபாட்டு முறையும் சொல்லிகொடுத்துவிட்டு, தயவு செய்து கொடுக்கும் மஞ்சளை கோவில் சுவர்களில் சஷ்டி போல் வரையவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அருமையான அலங்காரம் ஆத்மார்த்தமான தரிசனம். வேண்டுதலை நிறைவேர்த்திவிட்டு பதஞ்சலி முனிவரின் ஜீவா சமாதி முன்பு சற்று நேரம் அமர்ந்து விட்டு, பக்கத்தில் இருக்கும் பிரம்ம தீர்த்தம், அம்பாள் சந்நிதி, பன்னிரண்டு லிங்க தரிசனம் என மிக அழகானதொரு காலை வேலை முடிவுக்கு வந்தது.


கோவில் வெளியே கொஞ்சம் சர்பத் குடித்துவிட்டு அங்கிருந்து நேராக கல்லணை. படுகை பக்கத்தில் சென்று கொஞ்சம் அமர்ந்துகொண்டு ஆற்றின் அழகை ரசித்தபடிய இருக்கையில் கருடன் ஒன்று சுமார் அரை மணிநேரம் எங்கள் நால்வரின் அருகிலேயே வட்டமடித்து வந்தது. கழுத்து வெள்ளை நிறத்தில் இருக்க எங்களுக்கும் பரவசம். கீழிருக்கும் காணொளியை பாருங்கள்.



கல்லணை அழகும், கருடன் தரிசனமும் முடித்துவிட்டு நேராக மதியம் இரண்டு மணி அளவில் நாமக்கல். அங்கு மதிய உணவு. அங்கிருந்து மேட்டூரில் இருக்கும் அசோக் வீட்டிற்கு ஒரு நான்கு மணி அளவில் சென்றடைந்தோம். கொண்டு வந்த பிரசாதங்களை கொடுத்துவிட்டு, அவரின் லாப்ராடர் வகை நாயுடன் விளையாடிவிட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.
 
வழியில் மேட்டூரில் அசோக் படித்த பள்ளிக்கு சென்றோம், அங்கு எதோ ஆண்டு விழா நடைபெற கவிப்பேரரசு வைரமுத்து தலைமை, அங்கு சற்று நேரம் செலவிட்டுவிட்டு பின்னர், மேட்டூர் டேம், அங்கிருந்து சின்ன மேட்டூர் சென்று ஒரு சிறிய மலையிநிடயே நிறுத்தி மேட்டுரின் நீல அகலத்தை பார்த்துவிட்டு ஒரு தேனீருடன் பெங்களூருக்கு எங்கள் பயணம் தொடங்கியது. 
 
வழி நெடுகிலும் இருக்கும் மலைகள் யாவும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அங்காங்கே வாணவேடிக்கைகள் என்று வரும் வழி முழுவதும் எங்கும் வெளிச்சம்.
 
வழிந்தோடும் காலநதியில், கரைந்தோடும் வாழ்க்கையில் இந்த தினம் எங்கள் அனைவர்க்கும் ஓர் வரம். ஆயிரம் கதைகளில் மனம் லைக்கவில்லை என்றாலும், சென்று வந்த நாங்கள் அதன் பின் வரிசயாய் நடப்பதை உணர நீங்கள் நாங்களாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் அந்த பரவசத்திலிரிந்து இன்னும் மீளவில்லை என்பது நிதர்சனம்.



Friday, September 20, 2013

புரிதல்



என்னை மன்னித்துவிடு
எல்லையுள்ள அன்பை
உன்னிடத்தில் காட்டுவதில்
நான் தோல்வியடைந்துவிட்டேன்..!

விலகியும் விலகாமலும்
நெருக்கம் காட்டுகிற
உன் கலை
எனக்கு கை வருவதில்லை
ஆண் பெண் நட்பின்
சமூக பிரச்சனைகளை
நான் அறியாதவனும் இல்லை..!
உன்னைப் பற்றிய
என் நினைப்பை
அதிகரிக்கப்போகிற
நம் பிரிவில்
இனி நாம் நெருங்கியிருப்போம்..!

நீ மட்டும் ஏன்
இப்படியிருக்கிறாய்?
என அடிக்கடி கேட்கிறாய்
நான் என்ன செய்ய?
உன்னோடு பேசுகிற சந்தோசத்திலும்
பேசாத வருத்தத்திலும் தான்
எனக்கு கவிதை கிடைக்கிறது..!

காதல் திருமணம் செய்த
உன் பெயரைக்கொண்ட
வேறு ஒரு தோழியின்
பிரச்சனைகளுக்கு
அனுசரணையாய் நீண்டநேரம்
அலைபேசியில் பேசிய தாக்கத்தில்
உன்னை அவள் பெயரைச்சொல்லி
அழைத்துவிட்டேன்..!

வழக்கத்திற்கு மாறான
மெய்யெழுத்தின் அழுத்தம் கண்டு
கண்கள் சுருக்கி முறைத்து
என்னோடு பேசுகையில்
அவள் எப்படி
உன் நினைவுக்கு வரலாம்
என சண்டையிடுகிறாய்..!

உன்னைப் பற்றிய
என் கவிதைகள் பலவற்றை
மிகைப்படுத்தி எழுதியிருப்பதாக
சொல்கிறாய்..!
மிகைப்படுத்தி எழுதுவதுதான்
கவிதை என்றாலும்
வார்த்தைகளிலேயே
கொண்டுவரமுடியாத
நம் உணர்வுகள் பலவற்றை
வெளிப்படுத்த முடியாத
என் விரக்தியை
வேறு எதன் மீது
நான் இறக்கி வைக்க..?

நான் உன்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நீ என்னையும்,
நீ என்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நான் உன்னையும்
அன்பு செலுத்தவில்லையென்று
அவ்வப்போது மாறி மாறி
நினைக்க தூண்டும்
உன் வித்தையில்
எனக்கு புரிந்தது
நாம் நம்மை நம்மைத்தாண்டி
அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறோம்
என்பதுதான்..!

Monday, September 16, 2013

ஏக்கம்



ரகசியமாய் அழுகிறேன்..........
அவசியமாய் சிரிக்கிறேன்..........
மருந்தாய் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.......
நகர்கிறது தன் போக்கில் ......

காலத்தின் வேகத்தை சமநிலையில்
ஏற்றுகொள்கிறாய்..
உன்னால் மட்டும் எப்படி??

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல...

வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய்....

விரைந்தோடும் காலநதியில்
விழிகள் மூடும் போதெல்லாம்
பணித்திரையாய் நினைவுகள்...........

பொழிந்தும் பொழியாமலும்
நினவுச்சாரல்கள் எப்பொழுதும்
மனதை ஈரமாக்கிக் கொண்டு ...........

உறங்க முடியாத கனவுகள் தந்தாய்......
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்.....
வாழ்வு சுமைஎன்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்.....
இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்....

கவிதை படித்ததில்லை ... எழுத வைத்தாய்....
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை ....
என்னுள் நுழைந்து ... நீயே உணர்த்தினாய்....
கனவிலும் காணாத உலகம் தந்தாய் ....

நினைத்தும் பார்க்காத... நினைவுகள் தந்தாய்
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்....
உலகம் என்பதே உனக்காய் மாற்றினாய்..

சிரித்த கணங்கள் –சிலிர்த்த கணங்களாய்
மலர்ந்த கணங்கள் - உலகை மறந்த கணங்களாய்
என்மீது உறைந்த கணங்கள் - எனை உணர்ந்த கணங்களாய்
அணைத்த கணங்கள் - என் ஆனந்தக் கணங்களாய்......

உன் கைகோர்த்தபடி
மழையில் நனைய வேண்டும்......
மார்பில் சாய்த்தபடி
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்.......
மடியில் சாய்ந்தபடி
என் மரணம் வரை உறங்க வேண்டும.......

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும் தானே ...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும் தானே....
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும் தானே
நிச்சயம் இருக்கும்.......
இவை தேவதைகளுக்கான குணங்கள் ...
உனையன்றி யார் பெற்றிருப்பார் ...

அதிகம் காத்திருக்க வைக்காதே ....
வீணாவது உனக்கான காதல்தான்...

தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள் ...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்....
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்....
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்....